ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் மல்ஹார் பகுதியில், ரூ.10 லட்சம் ரொக்கமும், ஒரு காரும் வரதட்சணையாக தர மறுத்ததால், ராணுவ வீரரால் மனைவி கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் அசாம் அலி, ராணுவத்தில் பணியாற்றி வருபவர்.

சமூக ஊடகங்களில் பரவிய வீடியோவில், அவர் தனது மனைவி ரவீன் பேகத்தை அறைந்து, குத்தி, கையைப் பிடித்து இழுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அவளது அழுகையும், துயரமும் தெளிவாகத் தெரிந்தபோதிலும், அவர் தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்து தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த ரவீன் பேகம், பலத்த காயங்களுடன் உதம்பூர் அரசு மருத்துவக் கல்லூரி (ஜிஎம்சி) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வரதட்சணை தொடர்பாக உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல்களை அவர் தொடர்ந்து எதிர்கொண்டதாக, குடும்பத்தினர் ரேஹம்பல் போலீசில் புகார் அளித்துள்ளார்.

போலீசார், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498A (கணவரின் கொடுமை) மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அசாம் அலியை கைது செய்துள்ளனர். அவர் தற்போது போலீஸ் காவலில் உள்ளார்; விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று, உத்தரப்பிரதேசம் லக்னோவிலும் வரதட்சணை தொடர்பான இன்னொரு அதிர்ச்சிச் சம்பவம் பதிவாகியுள்ளது. திருமணமான 5 மாதங்களுக்குப் பிறகு, 32 வயது மது சிங் தனது வீட்டில் தூக்கிட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது கணவர், வணிக கடற்படை அதிகாரி அனுராக் சிங், ஆரம்பத்தில் தற்கொலை என்று கூறியிருந்தாலும், மதுவின் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை மற்றும் கொலை என குற்றம் சாட்டினர்.

திருமணத்திற்கு முன்பு ரூ.15 லட்சம் வரதட்சணை பெற்ற பிறகும், மதுவைத் தொடர்ந்து துன்புறுத்தியதாக அவரது தந்தை கூறினார். சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகளின் காரணமாக, அனுராக் மீது வரதட்சணை தடைச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.