சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார், கடந்த ஜூன் 27ஆம் தேதி காலையில், திண்டுக்கல் அரசு கல்லூரி பேராசிரியாக பணியாற்றி வரும் நிகிதா என்பவரின் புகார்  தொடர்பாக, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது தனது தாயாருடன் சென்ற சீமான் அஜித்குமார் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிவாரணத்தையும் வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, அஜித் குமார் மீது புகார் அளித்த நிகிதா மீது பல்வேறு பண மோசடி புகார்கள் வந்துள்ளது. இந்நிலையில் ஏன் அவர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.

போராட்டம் நடத்துவதற்கு நெறிமுறைகள் விதிக்கப்படும் நிலையில், அஜித்குமாரை விசாரிக்கும் போது ஏன் அதனை பின்பற்றவில்லை? என்று கேள்வி எழுப்பி உள்ளார். குற்றவாளியாக இருந்தாலும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றிருக்க வேண்டும். அவர் எவ்வளவு வலியை அனுபவித்து இருப்பார்.  திருடப்பட்ட நகையை மீட்டு விட்டீர்களா?. அந்த வழக்கின் நிலை என்னானது.

குற்றம் தெரியாத போது தான் சிபிஐ விசாரணை தேவை. இங்கு வெளிப்படையாக தெரிகிறது. உங்கள் காவல்துறையின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? சிபிசிஐடியில் இருந்து சிபிஐக்கு விசாரணையை மாற்றியதே எங்களை ஏமாற்றத்தான். காவல்துறை விசாரணையில் அரசுக்கு நம்பிக்கை இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.