
மதுரையில் தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் தெளிவாக கூறிவிட்டார். ஜனவரி 9-ம் தேதி எங்கள் நிலைபாட்டை கூறுகிறோம். செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் கூறியது போல தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எங்கள் கட்சியின் வலுவை நிரூபிக்க உள்ளோம்.
கடந்த 2021ல் விஜயகாந்த் தலைமையில் 29 சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபைக்கு சென்றார்கள். அதேபோன்று மீண்டும் பல எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு செல்வதுதான் எங்களின் ஆசை. அதற்காகத்தான் பாடுபடுகிறோம். விஜய் தேர்தலுக்கு வருவது அவரது பலம். விஜயகாந்த் வேறு. விஜய் வேறு. எங்களை சங்கடப்படுத்த எந்த கட்சியாலும் முடியாது. திமுக அதிமுகவோடு கூட்டணி வைப்பதற்கு எங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது.
விஜயகாந்த் ஆரம்பித்த கட்சி தோற்க விட மாட்டோம். யாருடன் கூட்டணி வைத்தால் ஜெயிப்போம் என்று நாங்கள் முடிவு எடுத்துள்ளோம். கருணாநிதி தான் விஜயகாந்த்திற்கு திருமணம் செய்து வைத்தார். அதன் பிறகு அரசியல் காழ்ப்புணர்ச்சி ஆகிவிட்டது. 2026 இல் தமிழகத்தில் கண்டிப்பாக கூட்டணி ஆட்சி மட்டும்தான் அமையும். தமிழ்நாடு என்பது திராவிட நாடு. திராவிடக் கொள்கைகள் கொண்ட கட்சிகளின் கூட்டணி ஆட்சி தான் அமையும். அதற்கான சாத்தியம் இருக்கிறது என்று கூறினார்.