ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் தொடர்பாக, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளார். ஈரான்-இஸ்ரேல் இடையே ஏற்பட்ட போர் சூழலில், ஈரானை எச்சரித்த அமெரிக்கா, ‘ஆபரேஷன் மிட்நைட் ஹாமர்’ என்ற ரகசிய நடவடிக்கையின் கீழ், பங்கர் பஸ்டர் வகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் இந்த தாக்குதலில், ஈரானின் முக்கியமான பர்டோவ், நடான்ஸ், இஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் பெரிதும் சேதமடைந்தன. ஆரம்பத்தில் தாக்குதலை மறுத்த ஈரான், பின்னர் உண்மையை ஒப்புக்கொண்டது. இந்த தாக்குதலால் ஈரானின் அணுசக்தி ஆயுத திட்டம் பல ஆண்டுகளுக்கு பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.

“அதிக ஆபத்தான சூழ்நிலையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம். ஈரான் எங்களின் போர் விமானங்களை முன்கூட்டியே கண்டு எச்சரிக்க முடியவில்லை. அவர்கள் அணு உலை நுழைவுப் பகுதியை மூட முயற்சி செய்த போதும், எங்களின் பங்கர் பஸ்டர் குண்டுகள் வெண்ணெயைக் குத்துவது போல இடையூறின்றி தாக்கியது. இதில், செறிவூட்டப்பட்ட யுரேனியமும் அழிந்தது,” என டிரம்ப் விளக்கினார்.

மேலும், கனடாவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் டிக்டாக் விவகாரங்களையும் அவர் விளக்கினார். “கனடா சில வரிகளை ரத்து செய்யும் வரை, அமெரிக்கா அவர்களுடன் எந்தவொரு வர்த்தக பேச்சுவார்த்தையையும் மேற்கொள்ளாது. டிக்டாக் நிறுவனத்தை யார் வாங்குகின்றனர் என்பது தொடர்பான விவரம், இன்னும் 2 வாரத்துக்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்,” என டிரம்ப் தெரிவித்தார்