
உத்தரபிரதேச மாநிலம் காஜிப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆலம்பட்டி பகுதியைச் சேர்ந்த அஜித் பாரதி என்பவர், தனது மனைவி மது ராஜ்பா கடந்த சில மாதங்களாக காணவில்லை என போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம், தனது தாய் வீட்டிற்குச் செல்வதாக கூறிவிட்டு வீடு விட்டு வெளியேறிய மது, இதுவரை வீடு திரும்பாத நிலையில், இன்ஸ்டாகிராமிலும் யூடியூபிலும் வீடியோக்களை பதிவேற்றி வருவது சமூகத்தில் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
அஜித் மற்றும் மதுவுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆரம்பத்தில் அவர்களின் குடும்ப வாழ்க்கை சீராக இருந்தது. ஆனால், மது தொடர்ந்து சமூக ஊடகங்களில் வீடியோக்களை பதிவேற்றுவது மற்றும் தனது பெற்றோரின் தாக்கத்திற்கு கீழ்ப்பட்டிருப்பது குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இவரது வீடியோக்கள் குறித்து குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, மது தனது மகள்களை விட்டுவிட்டு, தனது தாய் வீட்டிற்குச் சென்றதாக கூறியிருக்கிறார்.
அதன்பின்னர் அஜித் தனது மனைவியைத் தேடிய போது, அவர் தனது தாய் வீட்டிற்குச் செல்லவே இல்லை என தெரிந்தது. மாறாக, சமூக ஊடகங்களில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருவதை அஜித் கவனித்துள்ளார். இந்த சூழ்நிலையில், கடந்த ஜூன் 26ஆம் தேதி, அஜித் பாரதி தனது மனைவியை மீட்டு வர காவல்துறையின் உதவியை நாடி, காஜிப்பூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுவை வழங்கியுள்ளார்.
தற்போது இந்த விவகாரம் காவல்துறையிடம் விசாரணையாகும் நிலையில் உள்ளது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மனுவை பெற்றதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாகவும் அஜித் தெரிவித்தார். மனைவி சமூக ஊடகங்களில் பிஸியாக இருப்பதை பார்க்கும் நிலையில், குடும்பத்தின் மேல் ஏற்பட்ட விளைவுகளால் அஜித் மற்றும் அவரது இரு குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த சம்பவம் தற்போது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.