
சென்னை பாடர்தோட்டம் பகுதியில் அழகுராஜா என்பவர் வசித்து வருகிறார். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருக்கும் நிலையில் மயிலாப்பூரை சேர்ந்த சிவகுமார் என்ற ரவுடியை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கிறார். இவரை போலீசார் தேடி வரும் நிலையில் தலை மறைவாக இருக்கிறார்.
இந்நிலையில் இவர் தற்போது திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் பகுதியில் இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. உடனடியாக போலீசார் ரகசிய இடத்திற்கு விரைந்த நிலையில் 2 போலீசார் அவரை பிடிக்க பைக்கில் ஹெல்மெட் அணிந்தபடி சென்றனர். அவர் காரில் சென்று கொண்டிருந்த நிலையில், திருப்பத்தூர்-திருவள்ளூர் நெடுஞ்சாலையை அடைந்தது.
அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய ஒரு போலீஸ்காரர் அழகுராஜா காரை மறித்து அவரை பிடிக்க முயன்றார். ஆனால் ரவுடி காரை நிறுத்தாமல் வேகமாக சென்ற நிலையில் போலீஸ்காரர் காரில் தொங்கியபடி உயிரை பணயம் வைத்து அவரை பிடிக்க முயன்றார்.
சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அவர் தொங்கியபடி சென்ற நிலையில் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு கட்டத்தில் தன்னுடைய பிடியை விட்ட போலீஸ்காரர் கீழே விழுந்தார். அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். மேலும் சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.