டெல்லி வடகிழக்கு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்ட 20 வயதுடைய பெண் ஒருவர், அதே வார்டில் இருந்த மற்றொரு ஆண் நோயாளியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு பின்னர், பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை உயிரிழந்தார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், மருத்துவமனையின் முதற்கட்ட அறிக்கையின்படி, இந்த மரணம் பாலியல் வன்கொடுமை சம்பவத்துடன் நேரடி தொடர்புடையதா என்பது தற்போது உறுதி செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெண், டெல்லி வடகிழக்கு பகுதியில் தனியாக வசித்து வந்தவர். கடந்த வாரம், அவரது வீட்டுக்கு அருகிலுள்ளவர்கள் அவர் மயக்கம்  நிலையில் கிடந்ததை கண்டுபிடித்து, ஜாக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனையில் சேர்த்தனர்.

முதற்கட்ட மருத்துவ அறிக்கையில், அவர் மயக்க நிலையில் இருப்பதும், விஷப் பொருள் தாக்கம் இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர். அதன் பின்னர், அந்த வார்டில் சேர்க்கப்பட்டிருந்த முகம்மது ஃபைஸ் என்ற ஆண் நோயாளி அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது.

இந்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததை அடுத்து, போலீசார் ஃபைசை கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் ஜாக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனையிலிருந்து ஜிடிபி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது மரணத்துக்கான துல்லியமான காரணம் பற்றி பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்றும், அதன்பின் மேலும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.