விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பனிச்சமேடு மீனவர் கிராமம் உள்ளது. இங்கு விஜய் (25) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீமதி (23). இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகும் நிலையில் குழந்தைகள் இல்லை. இதில் விஜயின் அக்கா அமலாவுக்கு ஏழுமலை என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் 15 வயதில் கீர்த்திகா என்ற மகள் இருந்துள்ளார்.

இதில் ஏழுமலை கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் அமலா தன்னுடைய தம்பி வீட்டின் அருகே மகளுடன் குடியேறினார். சிறுமி கீர்த்திகா தன்னுடைய தாய் மாமன் வீட்டில் வளர்ந்த நிலையில் ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விஜய், அவரது மனைவி மற்றும் கீர்த்திகா ஆகியோர் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்ட நிலையில் பின்னர் கீர்த்திகா மாடிக்கு தூங்கு சென்று விட்டார். விஜய் மற்றும் அவரது மனைவி கீழே தூங்கிய நிலையில், நேற்று அதிகாலை விஜய் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்று விட்டார்.

ஆனால் ஸ்ரீமதி மற்றும் கீர்த்திகா இருவரும் நீண்ட நேரமாக வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் சந்தேகம் அடைந்த அமலா அக்கம் பக்கத்தினர் உதவியோடு வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டின் மாடியில் கீர்த்திகாவும் கீழே ஸ்ரீமதியும் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர்.

இதுகுறித்து மரக்காணம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் நேற்று முன்தினம் இரவு சிறுமி செல்போன் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.

அப்போது ஸ்ரீமதி பத்தாம் வகுப்பு என்பதால் நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தக் கூடாது என அவரை கண்டித்துள்ளார். தன்னுடைய அத்தை அறிவுரை கூறிய நிலையில் மனவேதனை அடைந்த சிறுமி வீட்டின் மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த ஸ்ரீமதி தான் திட்டியதால் தான் சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக நினைத்து மனவேதனையில் அவரும் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வந்தது.

மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.