இங்கிலாந்தின் லீட்ஸ் நகரத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமாக சதம் அடித்து அனைவரையும் ரசிக்க வைத்தார். முதல் நாள் ஆட்டத்தில் அவர் 101 ரன்கள் குவித்தார். கே.எல். ராகுலுடன் சேர்ந்து 91 ரன்கள் எடுத்த ஜெய்ஸ்வால், டக் அவுட்டாகிய சாய் சுதர்ஷனுக்குப் பிறகு கேப்டன் சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்து ஆட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்தார்.

இந்த ஆட்டத்தின் போது, ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இடையே நடந்த ஒரு சிரிப்பூட்டும் உரையாடல் ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. “உங்களுக்கு ரன் வேண்டாம்னா சத்தமா சொல்லுங்க… அடிச்ச பிறகு எனக்கு ஓடுற பழக்கம் இருக்கு!” என்ற ஜெய்ஸ்வாலின் வார்த்தைகள் ரசிகர்களிடம் வைரலாக பரவின. இது அவரது நேர்த்தியான ஆட்டத்துக்கு கூடுதலான மவுசை கொடுத்தது.

ஜெய்ஸ்வால் தனது முதல் 100 ரன்களில் பெரும்பாலும் ஆஃப் சைட் ஸ்ட்ரோக்குகளாக விளையாடி எதிரணி வேகப்பந்து வீச்சாளர்களைத் தடுமாறச் செய்தார். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இரண்டிலும் தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த இந்தியாவின் முதல் வீரராகவும் அவர் சாதனை படைத்துள்ளார்.  மேலும் அவர்கள் இருவரும் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.