தென்காசி மாவட்டத்தில் ஏற்பட்ட சம்பவம் ஒன்று பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையிலிருந்து குற்றாலத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு விரைவு பேருந்தின் பின்புற சக்கரங்கள் இரண்டும், சாலையில் தனியாக ஓடியதால் பயணிகள் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்த சம்பவம், கடையநல்லூர் அருகேயுள்ள இடைகால் பகுதியில் நடந்துள்ளது.

பேருந்தில் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் 87 பயணிகள் இருந்தனர். திடீரென சக்கரங்கள் அச்சிலிருந்து கழன்று சாலையில் வேகமாக ஓடியது. பேருந்து மிதமான வேகத்தில் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அவசரமாக ஓட்டுநர் பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தினார். எனினும், படியில் பயணம் செய்த மாணவர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“>

 

இந்த பரபரப்பான சம்பவத்தின் போது சாலையில் பெரிய வாகனங்கள் எதுவும் வராததால், ஒரு பெரிய விபத்திலிருந்து அனைவரும் தப்பினர் . இந்த நிகழ்வால் திருமங்கலம் – கொல்லம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. பின்னர் பேருந்து சாலையோரம் நகர்த்தப்பட்டதால் போக்குவரத்து இயல்புநிலைக்கு வந்தது.

பேருந்தில் பயணம் செய்தவர்கள், சக்கரங்கள் தனியாக ஓடியதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்தனர். “இவ்வளவு பெரிய விபத்திலிருந்து தப்பிப்பது ஒரு அதிசயம்,” என சிலர் கூறியிருந்தனர்.  மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.