
ஹரியானா மாநிலத்தின் ரேவாரி மாவட்டம் தருஹேரா பகுதியைச் சேர்ந்த செக்டார்-6 பகுதியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வியாழக்கிழமை அம்பலமானது. லைவ்-இன் உறவில் வாழ்ந்து வந்த இளைஞர் ஒருவர், தனது பெண் துணையை கொன்று விட்டுப் பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, வீட்டு உரிமையாளர் பூட்டை உடைத்துப் பார்த்தபோது, அந்த இருவரின் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அந்த பெண் 13 நாட்களுக்கு முன்பாகவும் இளைஞர் 2 நாட்களுக்கு முன்பாகவும் இறந்தது தெரியவந்தது.
இறந்த இளைஞர் பால்வால் பகுதியைச் சேர்ந்த யோகேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த வீட்டில் இருவரும் வாடகைக்கு குடியேறி இருந்தனர். ஜூன் 6ம் தேதி முதல் அந்த வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் புகார் அளித்ததை அடுத்து, வீடு திறக்கப்பட்டது. யோகேஷ் வீட்டில் மரணமடைந்த நிலையில் கிடந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டு, அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதே நேரத்தில், அந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. அவரது உடல் முற்றிலும் அழுகிய நிலையில் இருந்ததால், மரணம் எப்போது நடந்தது என்பதை தீர்மானிக்க முடியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் மட்டுமே காரணம் உறுதியாக தெரிந்திடும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது.