
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பேருந்து நிலையம் ஒன்று உள்ளது. அங்கு குணசேகரன் என்பவர் பேக்கரி கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். அவரது மனைவி தனலட்சுமி பேக்கரியை கண்காணித்து வருகிறார். அந்த பேக்கிரியில் கெட்டுப் போன கேக் விற்பனை செய்யப்பட்டதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று நேற்று வைரலானது.
அதில் பெண் வாடிக்கையாளர் ஒருவர் கெட்டுப்போன கேக்கை எதற்கு விற்பனை செய்தீர்கள் என கேட்பதும் அந்த கேக்கை நீங்களே சாப்பிடுங்கள் என்று அந்த பெண் தனலட்சுமிக்கு ஊட்ட முயல்வதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் அந்த பேக்கரியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. மேலும் உணவுப்பொருள்கள் காண தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்தது. இதை தொடர்ந்த அந்த பேக்கரி கடைக்கு ரூ. 4000 அபராதம் விதித்தார்.
இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அந்த வீடியோ சுமார் 6 மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் என்பது தெரியவந்தது. இதையடுத்து எதற்காக தற்போது இந்த வீடியோ பரவியது? என்பதை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.