அகமதாபாத் – லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் கடந்த ஜூன் 12 அன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இந்த பேரழிவில் விமானத்தில் இருந்த 241 பயணிகள் மற்றும் பணியாளர்கள், மேலும் தரையில் இருந்த 34 பேர் உயிரிழந்தனர்.

இது இந்திய விமான சேவையில் கடந்த நாற்பது ஆண்டுகளில் நடந்த மிக மோசமான விபத்தாகவும், உலகளவில் முதல் போயிங் 787 விபத்தாகவும் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்பல் வில்சன், பயணிகள் பாதுகாப்பு குறித்து விசுவாச திட்ட உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தக் கடிதத்தில், விபத்து நேரத்தில் பறந்த AI171 விமானத்தை, 10,000 மணிநேர பறக்கும் அனுபவம் கொண்ட கேப்டன் சுமீத் சபர்வால் இயக்கியதாகவும், முதல் அதிகாரி கிளைவ் குந்தருக்கு 3,400 மணிநேர பறக்கும் அனுபவம் இருந்ததாகவும் வில்சன் குறிப்பிட்டுள்ளார்.

விமானம் முறையான பராமரிப்புடன் இருந்ததாகவும், அதன் வலது இயந்திரம் மார்ச் 2025-இலும் இடது இயந்திரம் ஏப்ரல் 2025-இலும் பரிசோதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். விபத்து காரணம் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுக்காக அரசு பல்நிலை குழு பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விபத்துக்குப் பிறகு, ஏர் இந்தியா தனது 33 போயிங் 787 விமானங்களில் கூடுதல் பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதில் இதுவரை 26 விமானங்கள் சோதனை முடித்து சேவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள விமானங்கள் பராமரிப்பில் உள்ளதாகவும், அனைத்து சோதனைகளும் முடிந்த பிறகே சேவையில் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னுரிமையாக உள்ளதால், ஜூன் 20 முதல் ஜூலை நடுப்பகுதி வரை சர்வதேச வைட்பாடி விமான சேவைகள் 15% குறைக்கப்பட உள்ளன.

பயணிகள் பாதிக்கப்படுவதாக இருந்தால், கட்டணமின்றி மாற்றுதல் அல்லது பணம் திருப்பி வழங்கப்படும் எனவும் வில்சன் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், பயணிகள், பாதிக்கப்பட்ட குடும்பங்கள், மற்றும் விமானத் துறையினர் மீதான ஆதரவு தொடரும் என்றும், பாதுகாப்பு தான் எப்போதும் முன்னுரிமையாக இருக்கும் என்ற நம்பிக்கையை வில்சன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். AEIB விசாரணை அறிக்கைக்கு எதிர்பார்ப்பு வைக்கப்படும் என்றும், தேவையான நிரந்தர நடைமுறைகள் உருவாக்கப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.