
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் வள்ளியூர் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) மற்றும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வள்ளியூர் ஒருங்கிணைந்த சேவை மையத்தில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பிரச்சினைகள் மற்றும் சட்டசிக்கல்களுக்கான ஆலோசனை, பாதுகாப்பு, வழிகாட்டுதல் வழங்கும் நோக்கத்துடன் செயல்படும் வழக்கு பணியாளர் (Case Worker) – 1 பணியிடத்திற்கு, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது ஒப்பந்த அடிப்படையில் சுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளது.
மேலும், மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் பெண்களின் மேம்பாடு, தொழில் முனைவோர்கள் உருவாக்கம், குழந்தை திருமண தடுப்பு மற்றும் மகளிர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காக தரவு நுழைவு பணியாளர் (Data Entry Operator) – 1 பணியிடமும் காலியாக உள்ளது. இதற்கும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், https://tirunelveli.nic.in/ என்ற மாவட்ட இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து, ஜூன் 30-ம் தேதிக்குள் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருநெல்வேலி மாவட்டம் என்ற முகவரிக்கு தபால் மூலம் அல்லது நேரில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலரை நேரில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.