தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில், சிறுவன் ஒருவன் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து 7 இருசக்கர வாகனங்கள் மீது மோதியதோடு, அவ்வழியாகச் சென்ற ஒரு முதியவர் மீது ஏறி இறங்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டுநர் உரிமம் இல்லாத ஒரு சிறுவனின் கையில் காரைக் கொடுத்து அனுப்பிய பெற்றோரின் அலட்சியப் போக்கும், அந்தச் சிறுவனின் பொறுப்பற்றத்தனமுமே இந்த கோர விபத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இந்த பயங்கர விபத்தின் அனைத்துக் காட்சிகளும் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

சம்பவம் நடந்த அன்று, பலேனோ ரக காரை அதிவேகமாக ஓட்டி வந்த அந்தச் சிறுவன், குறுகலான பகுதியில் காரை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாமல் திணறியுள்ளான். அந்த நேரத்தில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றும் சென்று கொண்டிருந்த 7 இருசக்கர வாகனங்கள் மீது கார் அடுத்தடுத்து பலமாக மோதியுள்ளது.

காரின் வேகம் குறையாத நிலையில், அங்கே நடந்து சென்று கொண்டிருந்த ஒரு முதியவர் மீது இரக்கமின்றி கார் ஏறிச் சென்றுள்ளது. அலறியடித்து ஓடிய அப்பகுதி மக்கள், உடனடியாக ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த முதியவரை மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஓட்டுநர் உரிமம் பெறாத சிறுவர்களிடம் வாகனங்களை ஒப்படைப்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சியாக அமைந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சிறுவன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும், சிறுவனிடம் வாகனத்தைக் கொடுத்த அவரது பெற்றோர் மீதும் கடுமையான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாலையில் பாதுகாப்பாகச் செல்லும் சாதாரண பொதுமக்களின் உயிரோடு விளையாடும் இதுபோன்ற அலட்சியப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க, காவல்துறை கடுமையான தண்டனைகளை உறுதி செய்ய வேண்டும் எனச் சமூக ஆர்வலர்களும் கொதிப்புடன் வலியுறுத்தி வருகின்றனர்.

“>