இன்றைய சமூகத்தில் பரவும் வறுமை, பசி மற்றும் மனிதாபிமானம் குறைந்த போக்கு, சமூக ஊடகங்களில் புழங்கும் வீடியோக்களில் தொடர்ந்து பிரதிபலித்து வருகிறது. இதற்குச் சான்றாக, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த்ஷஹர் மாவட்டம் அவுரங்காபாத் நகரத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, ஒரு சிவப்பு நிற கார், பெட்ரோல் பங்க்கில் வந்து நின்றது. பின்னர் அங்கிருந்த ஊழியர் அந்த காரில்  CNG நிரப்பினார். அதனையடுத்து அந்த  ஊழியர் வழக்கம்போல் அந்த காரில் இருந்தவர்களிடம் பணம் கேட்டபோது, அந்தக் காரில் இருந்த முகமூடி அணிந்த நபர்கள் திடீரென எரிச்சலடைந்து, அந்த ஏழை  தொழிலாளியை திட்டினர். பின்னர் காரில் இருந்த குச்சி போன்ற பொருட்களை எடுத்து, அவரை சுற்றி வளைத்து கொடூரமாக தாக்கினர்.

இது குறித்த வீடியோவில், ஒருவர் பின்புறம் இருந்து, மற்றொருவர் பக்கவாட்டில் இருந்து அடித்தபோது, அந்த ஊழியர் தைரியம் இழந்து கைகளை கூப்பியபடி, “சகோதரரே, போய்விடுங்கள்… பணம் வேண்டாம்!” என்று உயிர் காக்கக் கெஞ்சும் காட்சி காணப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இச்சம்பவம் தொடர்பான வீடியோ வெளியானதும், புலந்த்ஷஹர் போலீசார் அச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட காரின் எண்ணை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த வீடியோ  சமூக வலைதளத்தில் பகிரப்பட்டதிலிருந்து மில்லியன் கணக்கான பார்வைகளைப் கடந்து வைரலாகியுள்ளது.
பலரும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு ஆதரவாகவும், குற்றவாளிகளுக்கு எதிராகக் கடும் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

“சட்டம் ஒழுங்கு இறுதிச் சடங்கில் கிடக்கிறது”, “இதை யாரும் தட்டிக்கேட்கவில்லையா?”, “யோகி மகாராஜ், இந்த குண்டர்களிடமிருந்து உங்கள் மக்களை காப்பாற்றுங்கள்” என பல்வேறு பதிவுகள் இடப்பட்டுள்ளன.

இந்த சம்பவம், சமூகத்தில் ஒழுங்கு மற்றும் மனிதநேயம் குறைந்துகொண்டிருப்பதை வெளிப்படுத்துவதோடு, சட்டப்பாதுகாப்பு அமைப்புகள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டிய அவசியத்தையும் தெளிவுபடுத்துகிறது.