நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கரடி, காட்டெருமை, காட்டு யானை, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, புலி ஆகியவை நடமாடுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் கோத்தகிரி நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவர் விடுதிக்கு செல்லும் வழியில் சிறுத்தை ஒன்று அதிகாலை நேரத்தில் ஆங்காங்கே சுற்றி திரிவது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று  மாணவர் விடுதியின் அருகே உள்ள அரசு ஊழியர் குடியிருப்பு பகுதியில் 2 முள்ளம்பன்றிகளை கண்ட சிறுத்தை பள்ளி வளாகத்தில் இருந்து தாவி குதித்து அதனை வேட்டையாட சென்றது. இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் சிறுத்தையின் நடமாட்டத்தால் வெளியில் வர முடியாமல் இருக்கிறார்கள். மேலும் சிறுத்தையின் நடமாட்டத்தால் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளதால் சிறுத்தையை காட்டு பகுதிக்குள் விரட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.