தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் இல்லாமல் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களை முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகியவற்றிற்கு அழைத்துச் செல்கிறது.

அதன்படி 1000 பக்தர்கள் 5 கட்டமாக அறுபடை வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் கட்டணம் இல்லாமல் 200 பக்தர்கள் தரிசனத்திற்கு செல்கிறார்கள். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 2000 பக்தர்கள் அறுபடைவீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்தத் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்ட பக்தர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளும், பயணப்பையும் வழங்கப்பட்டது. இதேபோன்று இந்த ஆண்டும் அறுபடை வீடுகளுக்கு தரிசனம் சொல்ல விரும்பும் பயணிகளுக்காக ரூபாய் 2.50 கோடி நிதி தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.

அதன்படி இந்த ஆண்டு கட்டணமில்லாமல் 2000 பக்தர்களை அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலைத்துறை முடிவெடுத்துள்ளது. அந்தத் திட்டத்தின் கீழ் அறுபடை வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அந்த நிதியின் மூலம் நிவர்த்தி செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

இதற்கான முதற்கட்ட அறுபடை தரிசன பயணம் வரும் ஜூலை மாதம் தொடங்க உள்ளது. இதற்கான அறிவிப்பை ஜூலை முதல் வாரத்தில் இந்து சமய அறநிலைத்துறை இணையதளத்தில் வெளியிடும். இதன் மூலம் அறுபடை தரிசனத்திற்கு செல்ல விரும்பும் 60 வயதை பூர்த்தி செய்த நபர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் இந்த ஆண்டு பக்தர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளதால் ஒவ்வொரு கட்டத்திலும் 400 பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

இதனைத் தொடர்ந்து ஆடி மாதத்தில் அம்மன் கோவில் ஆன்மீக தரிசன பயணம், புரட்டாசி மாதத்தில் வைணவ கோவில்கள் தரிசனப் பயணம் தொடங்க உள்ளதாக இந்து சமய அறநிலைத்துறை தெரிவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.