
மகளிர் அரசு பேருந்து பயணத்தை “ஓசி பயணம்” என அவமதித்து பேசிய திமுக எம்.எல்.ஏ மகாராஜனை எதிர்த்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் மண்ணூத்து பகுதியில் சமுதாய நலக்கூடம் திறப்பு விழாவில் திமுக ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. மகாராஜன் பேசியபோது, “மகளிர் அனைவரும் அரசு பேருந்தில் ‘ஓசி’யில் பயணியுங்கள். வீட்டில் ஆண்கள் சமையல் செய்யட்டும்,” என்ற அவரது பேச்சு சமூக வலைதளங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
மகளிர் திட்டங்களைப் பற்றிய பேச்சு – அவமதிப்பாகும் வகையில் கூறப்பட்டதா?
மக்களின் மனம் தெரிந்து முதல்வர் ஸ்டாலின் மகளிர் விடியல் பயணத் திட்டத்தை செயல்படுத்துகிறார் என பாராட்டு தெரிவித்தும், அதனை ‘ஓசி பயணம்’ என குறிப்பிட்டதன் மூலம் மகளிரின் மதிப்பை தாழ்த்தியுள்ளார் என பலராலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கும் முந்தைய நிலையில், முன்னாள் அமைச்சர் பொன்முடியும் கட்டணமின்றி பயணிக்கும் மக்களை “ஓசி பயணிகள்” என அவமதித்தது மற்றும் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் பெண்களை “ரூ.1000 வாங்கினதால்தானே பளபளன்னு இருக்கீங்க” என பேசினார் என்ற விவகாரங்களையும் நயினார் நாகேந்திரன் தன் கண்டனத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக தலைவர் குற்றச்சாட்டு:
“மக்களின் நலனுக்கான திட்டங்களை துவக்கும்போது அதைப் பற்றிய விளம்பரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற திமுக அரசு, அதே பயனாளிகளை பின்னால் ‘ஓசி’ என அவமதிப்பது தாமாகவே திராவிட மாடலின் இருமுகத்தன்மையை காட்டுகிறது” என நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், “ஒவ்வொரு முறை மகளிர் பயனாளிகளை இழிவுபடுத்தும் இவர்கள், பாதிப்படைந்த பெண்களுக்கு நியாயமாக ரூ.1000 கிடைக்கும் என்பதை உறுதி செய்யும் முயற்சியோ, பேருந்து வசதிகளை மேம்படுத்தும் ஆர்வமோ காட்டுவதில்லை. அதிகார மமதையில் மக்களை ஏளனப்படுத்துவது நியாயமல்ல. மகளிரை இழிவுபடுத்தும் திமுக அரசு இனிமேலும் திருந்தட்டும்” என கூறியுள்ளார்.