கேரள மாநிலம் இடுக்கிக்கு மதுரையைச் சேர்ந்த 4 வாலிபர்கள் சுற்றுலாவுக்காக சென்றுள்ளனர். இவர்கள் அங்கு பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்த நிலையில் பின்னர் நெடுங்கண்டம் பகுதிக்கு சென்றனர். அங்குள்ள தூவல் அருவிக்கு அவர்கள் சென்ற நிலையில் அங்குள்ள பாறைகள் வழுக்கும் என்பதால் அது மிகவும் ஆபத்தானது எனவே அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் ஆபத்தை உணராமல் அவர்களில் ஒருவர் அந்த அருவியியின் பாறையில் தண்ணீர் விழும் இடத்திலிருந்து செல்பி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வாலிபர் கீழே வழுக்கி நிலையில் சத்தமிட்டார். உடனடியாக அந்த பகுதியில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்த போது அவர் பாறையை ஒட்டியவாறு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார்.

உடனடியாக மற்ற நண்பர்கள் உள்ளூர் மக்கள் உதவியோடு கயிறு கட்டி அவரை மேலே இழுத்தனர். அதிர்ஷ்டவசமாக அந்த வாலிபர் உயிர் தப்பினார். அவரது கால் அங்கிருந்த மற்றொரு பாதையில் தட்டியதால் தான் அந்தரத்தில் தொங்கியபடி உயிர் பிழைத்துள்ளார்.

இது மிகவும் ஆபத்தான இடமாக இருக்கும் நிலையில் கடந்த 10 வருடங்களில் 12 பேர் இந்த பகுதியில் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.