
மேகாலயாவில் இந்தூர் தம்பதிகள் ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் ரகுவன்ஷி தேனிலவுக்குச் சென்ற பிறகு மர்மமான சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராஜா ரகுவன்ஷியின் கொலை வழக்கில், அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி முக்கிய குற்றவாளியாக கண்டறியப்பட்டு, உத்தரபிரதேசத்தின் காஜிபூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 17 நாட்களாக தலைமறைவாக இருந்த சோனம், தனது குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டதன் அடிப்படையில் போலீசாரால் பிடிபட்டார். மே 22 ஆம் தேதி ராஜா மற்றும் சோனம் தங்கள் தேனிலவுக்காக மேகாலயாவின் ஷில்லாங்கை சென்றனர். மே 23 ஆம் தேதி இருவரும் மர்மமான முறையில் காணாமல் போனார்கள். அதே நாளில், சோனம் தனது மாமியாரை மாலை 1.43 மணிக்கு கடைசி முறையாக தொடர்பு கொண்டார்.
பிறகு இருவரின் தொலைபேசிகளும் அணைக்கப்பட்டன. மே 24ஆம் தேதி ராஜாவின் ஸ்கூட்டர் ஓஸ்ரா ஹில்ஸ் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. ஜூன் 2ஆம் தேதி, வைசாவடோங் நீர்வீழ்ச்சிக்கு அருகில் ராஜாவின் உடல் கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
இந்த கொலை வழக்கில், சோனம் தான் ராஜாவைக் கொல்ல வாடகை அடிப்படையில் நபர்களை ஏற்பாடு செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவரை சோனம் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேகாலயா டிஜிபி லார்டோ நொங்ராங் தெரிவித்ததாவது, “முதற்கட்ட விசாரணையில், இந்த திட்டமிட்ட கொலையின் பின்புலத்தில் சோனம் இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வாடகைக் கொலையாளிகளை நியமித்துள்ளார்” என கூறினார்.
மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தனது ‘எக்ஸ்’ கணக்கில் பதிவிட்டதில், “ராஜா கொலை வழக்கில் வெறும் ஏழு நாட்களிலேயே முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மூன்று தாக்குதலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு நபரைக் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தி, சிபிஐ விசாரணைக்கான பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது சோனம் ரகுவன்ஷி காவலில் கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.