பெங்களூருவில் அண்மையில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றில், ஒரு பெண் பயணிக்கும்  ஆட்டோ டிரைவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. அதாவது ரேப்பிடோ ஆப்பில் ரூ.290 எனக் காட்டப்பட்ட கட்டணத்திற்கு பதிலாக, ரூ.390 கேட்டதாகக் கூறிய அந்த பெண், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து, அந்த ஆட்டோ டிரைவர், “இது பெங்களூர், கன்னடம் பேசணும். ஹிந்தி பேசக்கூடாது” என கோபமாக பதிலளித்தார்.

அதற்கு அந்த பெண்  எனக்கு பயமாக இருக்கிறது கத்தாதீங்க. ஆப்பில் என்ன காட்டுதோ அதுதான் நான் கட்டுவேன். நாங்க இங்க பணியாற்றுறோம். உங்கள் மொழியை மதிக்க முயற்சிக்கிறேன்” எனத் தெரிவித்தார். அந்தச் சூழ்நிலையை மற்றொரு ஆட்டோ டிரைவரிடம் விளக்க முயற்சி செய்தபோது கூட, அவர் மீது அழுத்தமாக கன்னடம் பேசுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, நெட்டிசன்கள் இடையே கடுமையான கருத்துப் பேச்சு உருவானது. சிலர், “ஒரு மாநிலத்தில் உள்ளூர் மொழியை மதிப்பது தவறில்லை. ஆனால் அதை கட்டாயமாக்குவது தவறு” எனக் கருத்து தெரிவித்தனர். மற்றொருபுறம், “பெண்  தன்னிலை புரிந்து நடக்கவேண்டும். அனைவரும் கன்னடம் பேச வேண்டும் என்பதில் தவறில்லை” என்ற கருத்தும் எழுந்தது.

 

இந்த விவகாரம், கன்னடத்தை ஊக்குவிப்பது மற்றும் பிறமொழிகளை பேசுவோரின் உரிமை ஆகிய இரண்டும் எங்கே சமநிலையடைய வேண்டும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது. மேலும் மாநிலத்தின் கலாசார மரபை பாதுகாப்பது முக்கியம் என்றாலும், அதைத் தாண்டி வன்முறை அல்லது பயம் ஏற்படும் நிலையை ஏற்படுத்தக்கூடாது என்பது நெட்டிசன்களின் பொதுவான கருத்தாகும்.