மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. 7 ஆண்டுகளாக காதலித்து வந்த சதீஷ் குமார் என்ற இளைஞர் திருமணத்திற்கு மறுத்ததால் அவரது காதலி விபரீத முயற்சியில் இறங்கினார்.

அந்த பெண், சதீஷின் தம்பி அமித் குமார் வசிக்கும் வீட்டிற்கு வந்தார். வீட்டின் கதவை சுத்தியலால் உடைத்து மூன்றாம் மாடியில் உள்ள சமையலறையில் நுழைந்தார். பின்னர் சிலிண்டர் நாப் திறந்தபடி, அடுப்பின் மேல் அமர்ந்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினார்.

இந்தச் சம்பவத்தின்போது, பெண்ணின் கையில் தீக்குச்சி இருந்ததாகவும், வீட்டை எரித்து விடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அவருடன் முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் இருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சதீஷ் குமார் மீது முன்னதாக அந்த பெண் பாலியல் புகார் அளித்ததையடுத்து அவர் 3 மாதங்கள் சிறையில் இருந்துள்ளார். ஜாமினில் வெளிவந்து, தற்போது பராகிராஜ் பகுதியில் தங்கி வேலைக்கு சென்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்தப் பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர் மீது தற்கொலை முயற்சி மற்றும் பிறருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்தப் பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது போலீசார், அதே நேரத்தில் முகமூடி அணிந்து வீட்டுக்கு வந்த மற்ற இரண்டு நபர்களையும் அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.