உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூரில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஒரு பெண்ணை 7 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து 4 பேரை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் அந்த புகாரை அளித்திருந்தார். அந்த புகாரில், சிவம், தௌஹித் கான், ரஞ்சித், ஒரு சிறுவன் மற்றும் மற்ற 3 பேர் சேர்ந்து தனது மகளை கடத்தியதாகவும், ரப்தி ஆற்றின் கரையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

அவ்வாறு கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில், போலீசார் வழக்கை தீவிரமாக விசாரிக்க தொடங்கினர். இதுகுறித்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்த போது, அந்தப் பெண் தனது காதலனான சிவம் என்பவருடன் பைக்கில் செல்லும் காட்சிகள் தெளிவாகக் காணப்பட்டன.

மேலும் அவர்கள் ஒரு ஹோட்டலில் தங்கியதும் உறுதி செய்யப்பட்டது. இதனால் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 6 பேரும் இந்த சம்பவத்தில் தொடர்பில்லாதவர்கள் என உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, போலீசார் முன்னதாக பதிவு செய்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கை மாற்றி, தற்போது பெண்ணின் காதலன் சிவத்தின் மீது மட்டுமே பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் புதிய வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனுடன், முறையற்ற புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 3 பேரின் பெயர்கள் வழக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இவர்கள் தற்போது நிரபராதிகள் என போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் மூலம் போலி புகார்களின் விளைவாக நிரபராதிகள் கைதாகும் அபாயம் எவ்வளவு தீவிரமானது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. காவல்துறையின் நேர்மையான விசாரணை மூலம் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

மேலும் பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, வழக்கை தொடர்ந்து விசாரித்து நீதிமன்றத்தில் உறுதியான ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.