பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் வன்னியர் சங்க நிர்வாகிகள் நீக்கம், புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. ராமதாஸ், அன்புமணிக்கு ஆதரவு அதிகமாக உள்ள மண்டலங்களை குறிவைத்து அங்குள்ள நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

அதேபோன்று கடந்த 16ஆம் தேதி முதல் டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளை தொடர்ந்து சந்தித்து அவர்களிடம் கருத்துக்களை கேட்டு அறிந்தார். நேற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் நேற்று திடீரென அன்புமணியை சந்தித்தார். இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்த கட்சியினரும் குடும்பத்தினரும் முயற்சி செய்தனர்.

ஆனால் நேற்று சந்திப்பு தோல்வி அடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தைலாபுரத்தில் பாமக கவுரவத் தலைவர் ஜி கே மணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. பாமகவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்படும். அதற்கான தொடக்கமாக இந்த சந்திப்பை பார்க்கலாம். பாமகவிலிருந்து விரைவில் நல்ல செய்தி வரும் என்று நம்புகிறேன் என்று கூறினார்.