
மராட்டிய மாநிலம் மும்பை சியான் என்ற பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஒரு நபர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியில் அவர் கூறியதாவது, தன்னுடைய மொபைல் எண்ணிற்கு ஒரு புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. அப்போது அதில் பேசிய நபர் தன்னுடைய கிரெடிட் கார்ட் வரம்பை அதிகரித்து தருவதாக பேசினார்.
அதனை நம்பி அந்த நபர் அனுப்பிய இணைதள லிங்கில் தன்னுடைய வங்கி விவரங்களை பதிவு செய்தேன். அப்போது என்னுடைய வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 4. 54 லட்சம் திருடப்பட்டது. எனவே தன்னுடைய பணத்தை மீட்டு தர கோரி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது இதே மொபைல் எண்ணிலிருந்து தங்களுக்கும் அழைப்பு வந்ததாகவும், தங்களுடைய பணமும் திருடப்பட்டதாக 16 நபர்கள் ஏற்கனவே புகார் அளித்துள்ளனர். அந்த மொபைல் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது அந்த எண் டெல்லியில் இருந்து செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
இதன் அடிப்படையில் டெல்லி சென்ற போலீசார் மொபைல் எண்ணை இயக்கி வந்த மன்ஜித் குமார் மஹாவீர் சிங்(29) என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது 11 பேர் கொண்ட கால் சென்டர் ஒன்று போலியாக நடத்தி வந்தது தெரியவந்தது. எனவே மகாவீர் சிங்கை போலீசார் கைது செய்தனர்.
இது போன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருவதால் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என போலீசார் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.