உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோவிந்த் நகர் பகுதியில் ஒரு ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இங்கு தேசிய அளவிலான டோக்வாண்டோ தடகள வீராங்கனை ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் படி ஒரு முதியவர் ஆசிரமத்தில் புதிய கடை அமைக்க உதவுவதாக அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். இதற்காக அந்த முதியவர் 4000 ரூபாய் பணம் கேட்ட நிலையில் பின்னர் அந்த ஆசிரமத்தில் உள்ள சில முக்கிய புள்ளிகளை சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார்.

அந்த முதியவரை நம்பி பாதிக்கப்பட்ட அந்த 28 வயது இளம்பெண் ஆசிரமத்திற்கு சென்றார். அங்கு சென்ற பிறகு ஒரு போதைப் பொருள் கலந்த லட்டுவை கொடுத்துள்ளனர். அந்தப் பெண் இதை சாப்பிட்ட நிலையில் பின்னர் மயங்கி விட்டார்.

அதன் பிறகு அந்த முதியவர், ஆசிரமத்தை சேர்ந்த தலைமை சாமியார், 2 பேர் என மொத்தம் நான்கு பேர் சேர்ந்த அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தன் புகாரில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அந்த பெண் கடந்த வியாழக்கிழமை காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.