ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது.

அதன் பிறகு இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவியது. முன்னதாக இந்தியா அட்டாரி வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்த ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அந்த நாட்டு அதிகாரி 24 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என வெளியுறவு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உளவு பார்த்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.