ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் நடந்த விபத்தில், 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் திங்கள்கிழமை நள்ளிரவு சங்கனேரி கேட் பகுதியில் நடந்தது.

சமஸ்கிருதி என்ற 27 வயது பெண் ஒருவர், குடிபோதையில் வேகமாக ஓட்டிய கார், ஆசாத் நகரைச் சேர்ந்த இஸ்லாமுதீன் என்ற நபர் ஓட்டிய பைக்கில் மோதியது. அந்த பைக்கில் அவர் தனது இரு மகள்களுடன் சென்றுகொண்டிருந்த நிலையில், மோதிய வேகத்தில் பைக் தூக்கி வீசப்பட்டு,  இஸ்லாமுதீனின் மகள் அசிமா(14)  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.

சம்பவத்திற்கு பின் கார் சற்று தூரம் சென்று நின்றது. அதில் இருந்த இரு ஆண்கள் தப்பி ஓடிவிட்டனர். ஆனால் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காரை ஓட்டிய சமஸ்கிருதியையும் பின் இருக்கையில் இருந்த மற்றொரு பெண்ணையும் கைது செய்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்த, மக்கள் கூட்டம் காவல் நிலையத்துக்கு வெளியே திரண்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.