தமிழ்நாடு முழுவதும் வரும் 5ம் தேதி நடைபெறும் ஒருநாள் சிறப்பு முகாமில் மின்சாரம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டண தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு வரும் ஐந்தாம் தேதி சனிக்கிழமை அன்று காலை 11:00 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர்கள் அலுவலகங்களிலும் ஒரு நாள் சிறப்பு முகாம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்றைய தினம் மின்மீட்டர்கள்,  குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றுதல், உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு நுகர்வோர் மற்றும் பொதுமக்களுக்கு தீர்வு தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்படும். எனவே மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.