
உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா மாவட்டம், விருந்தாவன் பகுதியில், 32 வயது ராஜா பாபு என்ற இளைஞர், வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட நிலையில் யூட்யூப் வீடியோக்களை பார்த்து தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்ய முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாலிபர் வயிற்று வலிக்கு பலமுறை மருத்துவர்களை அணுகியிருந்தாலும், நிவாரணம் கிடைக்காததால், அவர் மருந்து கடையில் இருந்து அறுவை சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், மயக்க மருந்து, அறுவை கருவிகள் வாங்கி, தானாகவே தன் வயிற்றை வெட்டியுள்ளார்.
ஆரம்பத்தில் மருந்தின் விளைவால் வலி உணராத அவர், மயக்க மருந்தின் தாக்கம் குறைந்ததும், தாங்க முடியாத வலியால் கத்திக்கொண்டே இருந்தார். அவர் தன் வயிற்றில் மொத்தம் 11 மடங்கு தையல் செய்து, தனது அறுவை சிகிச்சையை முடித்துள்ளார். பின்னர், அவரது நிலை மிகவும் மோசமானதை கண்ட குடும்பத்தினர், மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்து அவரது நிலையை கவனித்து வருகின்றனர். மருத்துவ அறிவில்லாமல் இப்படிப் பெரிய முடிவுகளை எடுக்கும்போது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.