சீனாவின் மிகப்பெரிய உணவகங்களுள் ஒன்றான ஹைடிலாவ் உணவகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம், சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாங்காய் நகரில் உள்ள ஹைடிலாவ் கிளையில், 17 வயது சிறுவர்கள் இருவர், உணவின் மீது சிறுநீர் கழிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதனால் உணவக நிர்வாகம் உடனடியாக மன்னிப்பு கோரி, சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தது. ஷாங்காய் போலீசார், குற்றம் செய்த இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஹைடிலாவ் உணவகம் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்துள்ளது. சம்பவம் நடந்த அன்று உணவகத்தில் 4,100 ஆர்டர்கள் பெற்றிருந்தனர்.  இதனால், அந்த ஆர்டர் செய்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பணத்தை திருப்பித் தருவதாக உணவக நிர்வாகம் அறிவித்துள்ளது. ஹைடிலாவ், அதன் சிறந்த சேவை மற்றும் தரமான உணவுக்காக பிரபலமானது. சீனாவில் மட்டுமின்றி, அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் தனது கிளைகளை விரிவுபடுத்தியுள்ளது. இந்த சம்பவம், உணவகத்தின் மதிப்பை பெரிதும் பாதிக்கக்கூடும் என்பதால், நிறுவனம் அவசர நடவடிக்கைகள் எடுத்து, வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சியில் உள்ளது.