மகாராஷ்டிரா மாநிலத்தின் மீன்பிடித் துறை அமைச்சர் நிதேஷ் ராணே, மாநிலத்திலுள்ள அனைத்து “ஜட்கா” மட்டன் கடைகளும் இனி “மல்ஹார்” என்ற சான்றிதழின் கீழ் பதிவு செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இந்த சான்றிதழ் மூலம், குறித்த கடைகள் 100% ஹிந்து வியாபாரிகளால் நடத்தப்படும் என்பதை உறுதிசெய்வதுடன், அவற்றில் விற்பனை செய்யப்படும் இறைச்சி தூய்மையாகவும், எந்தவிதமான கலப்பும் இல்லாததாகவும் இருக்கும் என்று அவர் தெரிவித்தார். மேலும், இந்த சான்றிதழைப் பெற விரும்பும் வியாபாரிகள் malharcertification.com இணையதளத்தின் மூலம் பதிவு செய்யலாம்.

மல்ஹார் சான்றிதழின் சிறப்பம்சங்கள்

இந்த புதிய சான்றிதழின் கீழ் பதிவு செய்யப்பட்ட கடைகளில் மட்டுமே சுத்தமான மற்றும் கலப்படமில்லாத இறைச்சி விற்பனை செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சான்றிதழை பெற்றுள்ள கடைகளில் இருந்து மட்டன் வாங்கும் மக்களுக்கு, அவர்கள் வாங்கும் இறைச்சி 100% தூய்மையானதாகவும், எந்த வேறு விலங்கு இறைச்சியுடனும் கலக்கப்படாததாகவும் இருக்கும் என்று உறுதி செய்யப்படுகிறது. தற்போதுவரை, புனேயில் உள்ள 10 கடைகள் இந்த மல்ஹார் சான்றிதழைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு நிதேஷ் ராணே விடுத்த வேண்டுகோள்

இந்த புதிய முயற்சியின் மூலம், மாநிலத்தின் இந்து வியாபாரிகள் மட்டனுக்கு தனித்துவமான சந்தை அமைத்துக் கொள்ள முடியும் என்றும், இதனால் அவர்களின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும் என்றும் அமைச்சர் நிதேஷ் ராணே தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் இனி “மல்ஹார்” சான்றிதழ் பெற்ற கடைகளிலிருந்து மட்டுமே இறைச்சி வாங்க வேண்டும் என்றும், இதன் மூலம் அவர்கள் தூய்மையான இறைச்சி வாங்குவதை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். “இந்த முயற்சியை மகாராஷ்டிரா முழுவதும் விரிவுபடுத்துவோம். இது இந்து சமுதாயத்திற்காக எடுக்கப்பட்ட முக்கியமான ஒரு நடவடிக்கையாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்கள் ஹலால் ஆட்டு இறைச்சிக் கடையை நடத்தி வரும் நிலையில் அவர்கள் அப்படிப்பட்ட இறைச்சியை மட்டும் தான் சாப்பிடுவார்கள் என்பதால் அதனை மட்டும் தான் விற்பனை செய்வார்கள். இதற்கு போட்டியாக தான் தற்போது இந்துக்களுக்காக இந்த ஆட்டு இறைச்சி கடை திறக்கப்படுவதாக பல தரப்பிலிருந்தும் ‌ குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.