2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக எப்படி பணியாற்றினால் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க முடியும் என்பது குறித்து புஸ்ஸி ஆனந்திடம் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதில் கட்சி கொள்கைகளும், தாங்கள் பின்பற்ற உள்ள தலைவர்களையும், அதற்கான காரணங்களையும் விஜய் அறிவித்தார். இதனை தொடர்ந்து கட்சியின் செயல்பாடுகள் அரசியல் களத்தில் உத்வேகம் அடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து சீரான இடங்களில் ஆலோசனை கூட்டங்களை நடத்தி புதிய மாவட்ட செயலாளர்களை விஜய் நியமித்து வருகிறார் . அந்த வகையில் சமீபத்தில் ஆதவ் அர்ஜுனாவிற்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர், சிடி நிர்மல் குமாருக்கு துணை பொதுச்செயலாளர் . நடிகர் ராஜ்மோகனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் என முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் விஜய்யை சென்னை நீலாங்கரையில் உள்ள அவருடைய வீட்டில் திடீரென்று சந்தித்து பேசினார். அப்போது அரசியல் நிலவரம், தேர்தல் வெற்றி பெறுவதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எந்தெந்த கட்சிகளை அரவணைத்து செல்ல வேண்டும்? உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து விவரித்ததாக கூறப்படுகிறது . இந்த நிலையில் இன்று தவெக குறித்து பரபரப்பு ஆய்வு அறிக்கையை பொதுச் செயலாளர் பிரசாந்த் கிஷோர் என்று வழங்கியுள்ளார்.

அந்த ஆய்வறிக்கையில் தமிழகத்தில் தவெக கட்சிக்கு 15 முதல் 20 சதவீதம் வரை வாக்குகள் கிடைக்கும். எந்த வயதினர் வாக்களிப்பார்கள் எந்த வயதினர் அளிக்கலாமா வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். எந்த பகுதியில் விஜய் கட்சிக்கு மேலும் செல்வாக்கு இருக்கிறது உள்ளிட்டவை குறித்து  வெளியிடப்பட்டுள்ளது. இந்த  பரபரப்பு அறிக்கையை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் ஷூட்டிங் நடைபெறும் இடத்தில் விஜயிடம் கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதில் மொத்தம் 28 அணிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.