மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு விழுப்புரத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற நிலையில் நேற்று நிறைவடைந்தது. இந்த மாநாட்டுடன் மாநில செயலாளர் பதவியில் இருந்து கே. பாலகிருஷ்ணன் விலகினார். அவருக்கு பதிலாக புதிய மாநில செயலாளராக சண்முகம் என்பவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மாநாடு முடிவடைந்த பிறகு கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது,‌ போலீஸ் சாதாரண ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் போன்றவற்றிற்கு அனுமதி மறுப்பது மிகவும் மோசமானது. ஒரு மாநில மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்படும் போது என்ன செய்வது. அதனை எப்படி பார்ப்பது.?

காவல்துறை செயல்படுவதை பார்த்தால் அவசரநிலை செயல்படுத்தப்பட்டது போன்று தான் இருக்கிறது. அனுமதி கேட்கும் போது கொடுத்தால் பரவாயில்லை அவர்கள் கொடுக்கா விடில் என்ன செய்ய முடியும். பொதுவாக அனைத்துக் கட்சிகளுக்கும் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிக்கு அனுமதி கொடுக்க வேண்டும். இது ஜனநாயக உரிமை. நான் இது தொடர்பாக முதல்வரை நேரில் சந்தித்து பேச இருக்கிறேன். எதிர்க்கட்சியினரின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பது ஆளும் கட்சிக்குதான் அவப்பெயரை ஏற்படுத்தும். மேலும் இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார்.