திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள பால்நாங்குப்பம் மச்சக்கண்ணு பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி உள்ளார். தினமும் மது குடித்துவிட்டு ரவிக்குமார் தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். நேற்று இரவு ரவிக்குமார் தனது மனைவியை துன்புறுத்தியுள்ளார். உடனே மணிமேகலை தனது மகன் சாரங்கபாண்டிக்கு தகவல் தெரிவித்தார். சாரங்கபாண்டியும் மது குடித்து வீட்டிற்கு வந்தார். அப்போது தந்தைக்கும் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் கோபமடைந்த சாரங்கபாண்டி தனது தந்தையை கட்டையால் பலமாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ரவிக்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்களிடம் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த ரவிக்குமார் கீழே விழுந்து படுகாயமடைந்ததாக உறவினர்கள் கூறியுள்ளனர். மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு ரவிக்குமார் ஆம்புலன்ஸில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ரவிக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து ஊர் மக்கள் பேசி ரவிக்குமாரின் உடலை புதைக்க ஏற்பாடு செய்தனர். இதுகுறித்து ரகசியமாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரவிக்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சாரங்கபாண்டியை கைது செய்து விசாரணை நடத்திய போது தான் ரவிக்குமார் குடிபோதையில் கீழே விழுந்து விட்டதாக நாடகமாடியது தெரியவந்தது.