கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா புளின் குன்னூர் காயல்புரம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண் விஜய் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மதுரை பாண்டி கோவில் பகுதியில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் அவர் பிசிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெங்களூரைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை அருண் விஜய் காதலித்துள்ளார். இந்த காதல் விவகாரம் குறித்து அறிந்த இரு வீட்டாரும் திருமணம் செய்து வைக்க ஒப்புக்கொண்டனர்.

கடந்த ஜூன் மாதம் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. கடந்த 27-ஆம் தேதி காதலர்கள் வீடியோ காலில் பேசி உள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் இணைப்பை துண்டித்தனர். சிறிது நேரம் கழித்து அருண் விஜய் ஐஸ்வர்யாவை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவர் போனை எடுக்காததால் மிரட்டுவதற்காக தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அருண் விஜய் குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.

இதனை பார்த்ததும் ஐஸ்வர்யா அருண் விஜயுடன் அறையில் தங்கி இருக்கும் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அறைக்கு சென்று பார்த்த போது அருண் விஜய் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று அருண் விஜயின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.