கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நாலஞ்சிரா அம்பநாடு என்ற பகுதியில் ராதா என்ற 70 வயது மூதாட்டி வசித்து வருகிறார். சம்பவத்தன்று காலை 6 மணி அளவில் தூக்கத்திலிருந்து எழுந்த மூதாட்டி அவரது வீட்டின் பின்புறம் சென்றுள்ளார். அப்போது
அங்கு மூடப்படாமல் இருந்த 30 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் மூதாட்டி நிலை தடுமாறி கீழே விழுந்தார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டதும் வீட்டில் இருந்த அவரது பேத்தியின் கணவரான வைஷாக் என்பவர் உடனடியாக வீட்டின் பின்புறம் வந்துள்ளார்.

இதனை அடுத்து மூதாட்டி கிணற்றில் விழுந்தது பார்த்த வைஷாக் உடனடியாக இடுப்பில் கயிற்றை கட்டிக்கொண்டு ஆழ்துளை கிணற்றில் இறங்கி மூதாட்டியை பத்திரமாக பிடித்தபடி கயிற்றில் தொங்கினார். இது குறித்து உறவினர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வைஷாக் மற்றும் மூதாட்டியை வலை மூலம் பத்திரமாக மேலே கொண்டு வந்தனர். மேலும் துணிச்சலாக ஆழ்துளை கிணற்றில் இறங்கி மூதாட்டியை காப்பாற்றிய வைஷாக்கை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.