துணை முதலவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது எடப்பாடி பழனிச்சாமி அரசியலில் அனுபவம் கிடையாது என்று அவரை விமர்சித்தது குறித்து கருத்து தெரிவித்தார். இது குறித்து அவர் பேசியதாவது, எடப்பாடி பழனிச்சாமி என்னை விட அரசியலில் அனுபவம் மிக்கவர் என்பதில் சந்தேகம் கிடையாது. நான் அதிமுகவினருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.கடந்த 2016 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்ட நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது.

அந்த சமயத்தில் எடப்பாடி பழனிச்சாமியை விட அதிமுகவில் ஏராளமான சீனியர்கள் இருந்த நிலையில் அப்போது அமைச்சராக இருந்த செங்கோட்டையன் தான் அடுத்த முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்பட்டது. அதேபோன்று திண்டுக்கல் சீனிவாசன், பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் செம்மலை போன்ற மூத்த தலைவர்கள் இருந்தபோது எடப்பாடி பழனிசாமி எப்படி முதல்வரானார். கூவத்தூரில் என்ன கூத்து நடந்தது, என்பதெல்லாம் தொலைக்காட்சி வாயிலாக மக்களுக்கு நன்றாக தெரியும்.

எடப்பாடி பழனிசாமி மற்றவர்களை விமர்சிப்பதற்கு முன்பாக தான் எப்படி முதலமைச்சராக மாறினோம் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். திமுக தற்போது எனக்கு பதவி கொடுக்கவில்லை. கூடுதல் பொறுப்பை தான் வழங்கியுள்ளது. ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சியை 4 வருடங்கள் நடத்த வேண்டும் என்பதற்காக துணை முதல்வர் முதல்வர் என்று பதவியை பங்கு போட்டுக் கொண்டனர் என்று கூறியுள்ளார்.