
வங்கக்கடலில் கடந்த 14ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் கடந்த 16ஆம் தேதி சென்னை அருகே கரையை கடந்தது. இந்நிலையில் தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் அரபிக்கடல் மற்றும் வங்க கடல் என இரண்டிலும் ஒரே நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. அதன்படி அரபிக்கடலில் 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலையில் வருகிற 22ஆம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.
வளிமண்டல சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி இந்திய பகுதியை விட்டு விலகிச் செல்லும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து புயலாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 2 காற்றழுத்த தாழ்வு பகுதியாலும் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டுள்ள நிலையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.