
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள சாலையில் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகள் கடந்த 4-ம் தேதி பந்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த மாநாட்டு நிகழ்ச்சிக்கு மொத்தம் 29 குழுக்கள் அமைக்கப்பட்டு, அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. அதோடு இந்த மாநாடு நடைபெறும் இடத்தில், முதல் மாநாட்டின் நினைவாக 100 அடி உயரத்தில் நிரந்தரக் கொடிக்கம்பம் அமைக்கப்பட இருக்கிறது.
இதனை தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் கொடியேற்ற உள்ளார். இதற்காக மணி என்பவரின் சொந்தமான இடத்தை அக்கட்சி 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது. இதற்கான பணி தற்போது தொடங்கியுள்ளது. கடந்த 12ம் தேதி அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரான ஆனந்த் தலைமையில் கொடிக்கம்ப பூஜை நடைபெற்றது. இந்தக் கொடிக்கம்பம் புயல் மற்றும் மழையை தாங்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. அதோடு 8 அடி ஆழத்தில் கொடிக்கம்பத்தின் அஸ்திவாரம் போடப்பட்டு, கொடியின் பீடம் 120 சதுர அடி அளவில் அமைக்கப்பட்டுள்ளது.