ஐசிசி தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசியின் தலைவரான கிரேக் பார்கிளேயின் பதவி காலம் இந்த ஆண்டோடு நிறைவு பெற இருக்கும் நிலையில் ஐசிசியின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது ஐசிசி நிர்வாகம். இதைத் தொடர்ந்து கிரேக் பார்கிளே பதவியில் நீடிக்க விருப்பமில்லை எனவும் ஐசிசி தலைவர் பதவிக்காக போட்டியிட போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் பதவியில் இருக்கும் ஜெய்ஷா ஐசிசியின் தலைவராக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என தகவல் வெளியானநிலையில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் ஜெய்ஷாவிற்கு ஆதரவு தெரிவித்து வந்தது. இந்நிலையில் ஐசிசி தலைவராக ஜெய்ஷாபோட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் டிசம்பர் 1 ஆம் தேதி பதவி ஏற்பார் என்று அதிகாரப்பூர்வமாக ஐசிசி தெரிவித்துள்ளது.