உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் அம்பானி. இவர் இந்தியாவின் முன்னணி பணக்காரர் ஆவார். இவர் ரிலையன்ஸ் மற்றும் ஜியோ நிறுவனங்களின் நிறுவனர். இவர் பல்வேறு விதமான தொழில்கள் செய்து வரும் நிலையில் தற்போது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீத மதிப்பு அம்பானி குடும்பத்தினருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. அதாவது இந்தியாவில் உள்ள பணக்கார வணிகக் குடும்பங்களின் வருமானம் தொடர்பாக பார்க்லேஸ் -ஹூருன் நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வில் 25.75 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் அம்பானி குழுமம் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக புனேவில் செயல்பட்டு வரும் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான பஜாஜ் நிறுவனம் இருக்கிறது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 7.13 லட்சம் கோடி ஆகும். அதன் பிறகு 3-ம் இடத்தில் 5.39 லட்சம் கோடி மதிப்பீட்டுடன் குமார் மங்கலா பிர்லா குடும்பம் இருக்கிறது. இந்த 3 வணிக நிறுவனங்களின் மொத்த மதிப்பு மட்டும் ரூ.38.27 லட்சம் கோடி ஆகும். மேலும் இதே சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமம் என்ற தகவலும் ஆய்வில் தெரியவந்துள்ளது.