
சென்னை மாவட்ட சமூக நல அலுவலராக ஹரிதா என்பவர் இருக்கிறார். இவருக்கு நேற்று முன்தினம் ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் மயிலாப்பூரில் கடந்த 10-ம் தேதி குழந்தை திருமணம் நடந்ததாக தெரிவித்தார். அதாவது 9 வயது சிறுமிக்கும் 15 வயது சிறுமனுக்கும் அவர்களுடைய பெற்றோர்களே திருமணம் செய்து வைத்ததாக அதிர்ச்சி தகவலை கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஹரிதா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் திருமணம் நடந்தது உண்மை என தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி சிறுவர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இரு குழந்தைகளின் பெற்றோர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இரு தரப்பினருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களிடம் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.