
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து தரப்பினருமே இணைய வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போனை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் திருப்பதியில் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் சார்பில் 5 ஜி பயன்பாடு தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் ட்ராய் தலைவர் அனில் குமார் ஸ்கோட்டி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவின் தொலைத்தொடர்பு நெட்வொர்க் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 119 கோடியாக அதிகரித்துள்ளது. இதேபோன்று பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 92 கோடியாக இருக்கிறது. இந்தியாவில் ஸ்மார்ட் ஃபோன்களின் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இந்தியாவில் செல்போன் சந்தாதாரர் ஒருவர் மாதத்திற்கு சராசரியாக 21.23 ஜிபி டேட்டாவை பயன்படுத்துகிறார் என்று கூறினார்.