
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக தற்போது வீடு வீடாக சென்று மக்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து விண்ணப்ப பதிவிற்கான சிறப்பு முகாம் வருகின்ற ஜூலை 24ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
இந்நிலையில் குடும்பத் தலைவிகளுக்கான இந்த உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் வங்கி கணக்கு இல்லாமல் உள்ளனர். வங்கி கணக்கு புதிதாக திறப்பதற்கு கட்டாயமாக குறைந்தபட்ச இருப்பு தொகை செலுத்த வேண்டிய நிலை உள்ளது. அதனால் குடும்பத் தலைவிகள் எந்தவித இருப்புத் தொகையும் செலுத்தாமல் கூட்டுறவு வங்கியில் ஜீரோ பேலன்ஸ் என்ற அடிப்படையில் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கூட்டுறவு வங்கிகளுக்கு சேமிப்பு கணக்கு தொடங்க வரும் குடும்பத் தலைவிகள் 3 பாஸ்போர்ட் புகைப்படம், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை ஜெராக்ஸ் மற்றும் அசல் ஆகிய ஆவணங்களை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் என கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது. மேலும் குடும்பத் தலைவிகளுக்கு எளிதில் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.