மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் காஞ்சிபுரத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பிறகு அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ. 10,000 நிதி உதவி வழங்கிய கே. பால கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட பட்டாசு நிறுவனமும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். அதன் பிறகு கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது, காஞ்சிபுரத்தில் நடந்த பட்டாசு வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும். உரிய அனுமதி இல்லாமல் செயல்படும் பட்டாசு ஆலைகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதன் பிறகு ஆருத்ரா மற்றும் ஐஎஃப்எஸ் என்று சொல்லக்கூடிய நிதி நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ஏமாற்றியுள்ளனர்.

2,800 கோடி ரூபாய் ஏமாற்றியுள்ளனர் என செய்திகளில் வெளிவந்தாலும் பல காவல்துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகள் மற்றும் அரசு துறை சார்ந்தவர்களும் முதலீடு செய்துள்ளதால் வெளியே சொல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தமிழக பாஜகவில் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் தான் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. தமிழக பாஜகவினர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் போன்றவைகளும் எழுகிறது. மேலும் தமிழக பாஜக சமூக விரோதிகளின் புகலிடமாக இருக்கிறது என்று கூறினார்.