தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாளமுத்து நகர் மொட்ட கோபுரம் கடற்கரை பகுதியில் இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் tramadol hydrochloride injection 50 mg/m1 என்ற போதை ஊசிகள் சட்டவிரோதமான முறையில் வெளியூரிலிருந்து வாங்கிவரப்பட்டது தெரியவந்தது.

இதனை அடுத்து தாளமுத்து நகர் சமர்வியாஸ் நகரை சேர்ந்த செல்வகுமார் (45) மற்றும் திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த ரஹிம் (48) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் பின் அவர்களிடமிருந்து 800 tramadol hydrochloride injection போதை ஊசிகள், ரூபாய் 11,300 பணம் மற்றும் பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுபோன்ற போதை ஊசிகள் மருத்துவமனைகளில் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

இதனைப் போன்ற போதை மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசிகளை மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் விற்பனை செய்யும் மருந்து கடை உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் எச்சரித்துள்ளார்.