
சட்டீஸ்கர் மாநிலம் ராஜ்நந்கான் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வந்துள்ளது. இந்நிலையில் ஜோராடரை பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வரும் ஆறு மாணவர்கள் பரிட்சை முடிந்தவுடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மழை அதிகமாக பெய்த காரணத்தினால் அருகில் உள்ள இடத்தில் ஆறு மாணவர்கள் மற்றும் மேலும் மூவர் ஒதுங்கி நின்று கொண்டிருந்தனர். மதியம் ஒன்றரை மணியளவில் எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் ஆறு மாணவர்கள் உட்பட எட்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒருவர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காயமடைந்தவரை மீட்டு தீவிர சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அறிந்த சட்டீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சர் விஷ்ணு டியோ சாய் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 4 லட்சம் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.