திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 8 மாத குழந்தை, விளையாட்டு ரிமோட் கண்ட்ரோல் காரின் எல்இடி பல்ப்-ஐ தவறுதலாக விழுங்கியது. குழந்தை மூச்சுத் திணறல் மற்றும் காய்ச்சல் போன்ற பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், எக்ஸ்ரே பரிசோதனையில் குழந்தையின் நுரையீரலில் ஒரு பொருள் சிக்கி இருப்பது கண்டறியப்பட்டது. குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படாதவாறு, இரும்பு ஊசி போன்ற பொருளை அகற்ற மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் பிராங்கோஸ்கோப்பி சிகிச்சையை மேற்கொண்டு வெற்றிகரமாக அகற்றினர்.

சிகிச்சைக்கு பின்னர் குழந்தை முழு நலம் பெற்று வீட்டிற்கு திரும்பியது. சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவர்களை, மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஷ் குமார் பாராட்டினார். பெற்றோர்கள் குழந்தைகளின் பாதுகாப்பை கவனமாக பார்க்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.